விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிடம் டி.என்.ஏ பரிசோதனை.
லண்டன்: லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. அதன்பின்னர், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் அவர் தஞ்சம் அடைந்தார். இதனிடையே, கடந்த 2010-ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்சே மீது அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியேறினால், அவர் கைது செய்யப்பட்டு ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவார் என்பதால், அவர் 2012-ம் ஆண்டில் இருந்து ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக, ஸ்வீடன் அரசின் தலைமை வழக்குரைஞர் லண்டன் வந்துள்ளார். ஈக்வடார் தூதரகத்திற்குச் சென்ற அவர், பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அசாஞ்சேவிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் விசாரணையின் முடிவில், அசாஞ்சே ஒப்புதல் அளித்தால் அவரது டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈக்வடார் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ரகசியமாக விசாரணை நடத்தப்படுவதால், அதன் விவரங்களை வெளியிட முடியாது என ஸ்வீடன் அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, அசாஞ்சேவிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈக்வடார் தூதரகத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் கைகளில் பேனர்களை ஏந்தியபடி கோஷமிட்டனர்.







கருத்துகள் இல்லை