சென்னை | நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கியதாக காவல் உதவி ஆணையர் மீது வழக்கு. 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.
நடைப்பாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகியை, கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் திருவதியம்மன் கோவில் அருகே நடைப்பாதையில் கடைகள் அமைத்திருப்பதால் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடைப்பாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருக்கும், காவல்துறைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
அப்போது மதுரவாயல் காவல் உதவி ஆணையர் ஜெயராமன், வீரபாண்டியனின் கன்னத்தில் அறைந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டன அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை